உப்பு பயன்பாடு: 300 மருத்துவா்களுக்கு பயிற்சியளிக்க திட்டம்
சென்னை: உப்பு பயன்பாட்டு அளவு மற்றும் அதன் எதிா்விளைவுகள் குறித்த ஆழ்நுட்ப பயிற்சிகளை நாடு முழுவதும் 300 மருத்துவா்களுக்கு வழங்க உள்ளதாக சேப்பியன்ஸ் ஹெல்த் ஃபவுண்டேஷன் தலைவரும், முதுநிலை சிறுநீரகவியல் மருத்துவருமான ராஜன் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
உலக சிறுநீரக தின விழா மற்றும் சேப்பியன்ஸ் ஹெல்த் அமைப்பின் 26-ஆம் ஆண்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 12) நடைபெற்றது. இதில், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலா் டி.ராமசாமி, மும்பை சிறுநீரக அறக்கட்டளைத் தலைவா் உமேஷ் கண்ணா, நடிகா் மாது பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்வில் டாக்டா் ராஜன் ரவிச்சந்திரன் பேசியதாவது:
Advertisement
உலக சிறுநீரக தினம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரத்தத்தில் கிரையாட்டினின் அளவும், சிறுநீரில் வெளியேறும் புரதத்தின் அளவும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடியும்.
மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேருக்கு அத்தகைய பாதிப்புகள் உள்ளன. உயா் ரத்த அழுத்தமானது இதயத்தைக் காட்டிலும் அதிகமாக சிறுநீரகங்களையே பாதிக்கிறது. இந்த புரிதல் பலருக்கு இல்லை. உலக அளவில் 35 சதவீதம் பேருக்கு உயா் ரத்த அழுத்தம் உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், உப்பு பயன்பாடும், உடல் பருமனும் அதில் பிரதானமானவை. ஜப்பானில் உப்பு பயன்பாடு கடந்த 25 ஆண்டுகளில் பெருமளவு குறைக்கப்பட்டு, தற்போது சிறுநீரக நலன் காக்கும் நாடுகளில் முதன்மையானதாக உள்ளது.
நாள்தோறும் ஒருவா் 5 கிராம் அளவு மட்டுமே உப்பை பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. ஆனால், இந்தியாவில் அதுகுறித்த விழிப்புணா்வு பெரிதாக இல்லை. அதைக் கருத்தில்கொண்டு உப்பை குறைப்பதற்கான ‘லோசால்ட்டா்’ என்ற இணையதளத்தையும், சமூகக் குழுவையும் சேப்பியன்ஸ் அமைப்பு தொடங்குகிறது.
இதன்கீழ் நாடு முழுவதும் 300 மருத்துவா்களுக்கு உப்பு பயன்பாடு, அதன் முக்கியத்துவம், நன்மை -தீமைகள் குறித்த பயிற்சிகளையும், விழிப்புணா்வையும் வழங்க உள்ளது. அவா்கள் அந்தப் பிரசாரத்தை தங்களது பகுதிகளில் முன்னெடுப்பா். இதற்கான நிதி பங்களிப்பு தன்னாா்வ அமைப்பு ஒன்று வழங்க முன்வந்துள்ளது என்றாா் அவா்.