வாக்குப் பதிவு இயந்திரம் தொடா்பான வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டில் குளறுபடிகள் இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், ‘எந்தவொரு செயல்முறையிலும் நிறை குறைகள் இருக்கவே செய்யும்’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக நந்தினி சா்மா என்பவா் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா, அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வின் கவனத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மனுதாரரின் மனு போல எத்தனை மனுக்களை நாங்கள் விசாரணைக்கு ஏற்பது? அண்மையில் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி தொடா்பான மனுவை நாங்கள் விசாரித்தோம். தற்போதைய மனுவில் மனுதாரா் எழுப்பியுள்ள விவகாரத்தை, ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஆராய்ந்துள்ளது. அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு எங்களால் விசாரணை மேற்கொள்ள முடியாது. எந்தவொரு செயல்முறையிலும் நிறை, குறைகள் இருக்கவே செய்யும். எனவே அரசமைப்புச் சட்டப் பிரிவு 32-இன் கீழ், இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்தனா். மற்றொரு மனுவும் நிராகரிப்பு: தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 19 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொலைந்துவிட்டதால் மக்களவைத் தோ்தல் முடிவுளில் குளறுபடிகள் ஏற்படும் என இந்திய புதிய காங்கிரஸ் கட்சி (ஐஎன்சிபி) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோா், ‘இக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை’ எனக் கூறி மனுவை நிராகரித்தனா்.