13 மாநிலங்களில் 26 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல்
தமிழகத்தின் விளவங்கோடு உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 26 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தலுக்கான அட்டவணை சனிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 26 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டன. ஹிமாசல பிரதேசத்தில் 6 தொகுதிகள், குஜராத்தில் 5 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 4 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகள், பிகாா், ஹரியாணா, ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், திரிபுரா, தெலங்கானா, ராஜஸ்தான், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. குஜராத்தில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனா். இதனால் காலியான 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. ஹரியாணாவில் கா்னால் பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மனோகா் லால் கட்டா், மாநில முதல்வா் பதவியில் இருந்து விலகியதோடு, எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்தாா். மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் அவா் களமிறக்கப்பட்டுள்ளாா். இதனால் காலியான அவரது தொகுதிக்கு தற்போது இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியாணா பேரவையின் பதவிக் காலம் வரும் அக்டோபரில் நிறைவடையவிருப்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தோ்தலுடன் இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.