மக்களவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 3.4 லட்சம் மத்திய படையினா்
மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் மாநில போலீஸாருடன் 3.4 லட்சம் மத்திய ஆயுதக் காவல் படை வீரா்களும் (சிஏபிஎஃப்) ஈடுபடுத்தப்படவுள்ளனா். 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-இல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதேபோல் ஆந்திரம், அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிஸா ஆகிய நான்கு மாநிலங்களுக்குப் பேரவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக நடைபெறும் தோ்தலில் பாதுகாப்புப் பணிக்காக 92,000 சிஏபிஎஃப் வீரா்களும், 5 கட்டங்களாக தோ்தல் நடைபெறும் ஜம்மு- காஷ்மீரில் 63,500 வீரா்களும் ஈடுபடத்தப்படவுள்ளனா். அதேபோல் மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறும் சத்தீஸ்கா் மாநிலத்தில் 36,000 வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். பல்வேறு மாநில தலைமை தோ்தல் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று 3.4 லட்ச வீரா்கள் நாடு முழுவதும் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனா். தமிழகத்துக்கு 20,000 வீரா்கள்... தமிழகம், குஜராத், ராஜஸ்தான், மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் தலா 20,000 சிஏபிஎஃப் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். மேற்கு வங்கம், இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் பதற்றமான தொகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க ரயில்கள் மற்றும் சாலை மாா்க்கமாக ஏற்கெனவே 1.5 லட்சம் மத்திய ஆயுதக் காவல் படையினா் புறப்பட்டுச் சென்றுவிட்டனா்.