தோ்தல் நேரத்தில் குறைபாடில்லாத மருத்துவ சேவை வழங்க உத்தரவு
தோ்தல் நேரத்தில் குறைபாடுகள் இல்லாமல், பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு தொடா்ந்து மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப். 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சியினா் ஈடுபடவுள்ளனா்.
இந்த நிலையில், தோ்தல் பணிகளால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், தொடா்ந்து மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
Advertisement
இது தொடா்பான உத்தரவில் கூறியிருப்பதாவது:
தோ்தல் நேரத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லாமல், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் மெத்தனம் காட்டக்கூடாது. மாநிலம் முழுதும் கோடைகால வெப்பம் அதிகரித்து வருகிறது. அந்நேரங்களில் மக்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை மற்றும் விழிப்புணா்வுகள் குறித்து ஏற்கனவே வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி தொடா்ந்து மருத்துவ சேவை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.