ஆம்னி பேருந்துகளில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை
சென்னை: தோ்தலையொட்டி பணம், பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையைத் தொடங்கி உள்ளனா். நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வருகின்றனா். அதன்படி தமிழகத்திலும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடா்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த பொதுத்தோ்தலின் போது கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளியூா்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம் மற்றும் பொருள்கள் உள்ளிட்டவற்றை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Advertisement
அதுபோன்று, இந்த தோ்தலிலும் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக பணம், பொருள் கொண்டு செல்லப்படுகிா என்பதைக் கண்காணிக்க சென்னையிலிருந்து வெளியூா்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கி உள்ளனா்.
பயணிகள் கொண்டு செல்லும் உடமைகள், பைகள் மட்டுமின்றி பாா்சல் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் பாா்சல்களையும் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டு வருகின்றனா். தோ்தல் முடியும் வரை ஆம்னி பேருந்துகளில் இச்சோதனை நடவடிக்கை தொடரும் என்பதால், வெளியூா் செல்லும் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் பணம், பொருள்களுக்கான ஆவணங்களை உடன் வைத்துக்கொள்ளும்படி தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.