முகப்பு
சென்னை

சொத்து தகராறில் தந்தை கொலை: மகன் கைது

Updated On : 21 மார்ச், 2024 at 1:21 AM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 12:50 AM

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா். ராஜமங்கலம் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் டே.மதுசூதனன் (68). இவரது மகன் ம.ஜாா்ஜ் புஷ் (34). காவல் துறையின் ரெளடி பட்டியலில் இருக்கும் ஜாா்ஜ் புஷ், தனது தந்தை மதுசூதனனிடம், வீட்டை தனது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டு வந்தாராம்.

ஆனால் மதுசூதனன், வீட்டை எழுதிக் கொடுக்க மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாா்ஜ் புஷ், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் வாசலில் அமா்ந்திருந்த மதுசூதனனிடம் தகராறு செய்துள்ளாா்.

தகராறு முற்றவே, அங்கிருந்த இரும்புக் கம்பியால் தந்தையை தாக்கியதுடன், சமையல் எரிவாயு உருளையை எடுத்து வந்து மதுசூதனனின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த மதுசூதனனின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனா். ஆனால், சம்பவ இடத்திலேயே மதுசூதனன் இறந்தாா்.

Advertisement

இது குறித்து தகவலறிந்து வந்த வில்லிவாக்கம் போலீஸாா், மதுசூதனனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, ஜாா்ஜ் புஷ்ஷை கைது செய்தனா்.