மரண தண்டனையில் விதிவிலக்கு உண்டு! எப்படி நிறைவேற்றப்படும்?
மரண தண்டனையில் விதிவிலக்குகள் மற்றும் நிறைவேற்றப்படும் நடைமுறைகள் பற்றி..
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
காவல் மரண வழக்கில், முதன்முறையாக காவலர்களுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ஆஜரான வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுவது மற்றும் அது நிறைவேற்றப்படும் விதம் ஆகியவை பேசுபொருளாகியிருக்கிறது.
Advertisement
பொதுவாக மிகத் தீவிரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கே மரண தண்டனை விதிக்கப்படும். திருந்தி வாழத் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றம் கருதும் நிலையில், சாட்சியங்கள் எந்த சந்தேகத்துக்கும் இடமளிக்காத வகையில் நிரூபிக்கப்படும் கொடுங்குற்றங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காகவே மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
மரண தண்டனையை பிறப்பித்த நீதிபதி, அந்த தீர்ப்பை மறு சிந்தனை செய்யவோ, திருத்தவோ முடியாது என்பதை குறிக்கும் வகையில்தான் பேனாவின் முனையை உடைக்கிறார். ஒரு உயிரைப் பறிக்கும் தீர்ப்பினை எழுதிய பேனா மீண்டும் இதுபோன்றொரு தீர்ப்பினை எழுதிவிடக் கூடாது என்ற நேர்மறை எண்ணத்திலும் முனை உடைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மரண தண்டனையிலிருந்து விதிவிலக்கு உண்டு: மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றத்தில் ஈடுபட்டவராயினும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை. அவர்களுக்கு சீர்திருத்த நிலையத்தில் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் அடைத்துவைக்க மட்டுமே சட்டம் வழிவகுக்கும்.
கர்பிணிகள் - குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 416-இன் கீழ், மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண் கருவுற்றிருந்தால், அந்தத் தண்டனை ஒத்திவைக்கப்படும் அல்லது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும். அதாவது கர்பிணிப் பெண்களுக்கு மரணதண்டனையிலிருந்து விலக்கு உள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை, எந்தவொரு குற்றத்துக்கும் சட்டம் பொறுப்பாக்குவதில்லை. இது மரண தண்டனைக்கும் பொருந்தும். எனவே மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவது எப்படி? மரண தண்டனை நிறைவேற்றப்படும் நபரை, தூக்கிலிடுவதற்கு முன்பு, அதனை நிறைவேற்றுபவர், குற்றவாளியிடம் மன்னிப்புக்கோருவார். குற்றவாளி இந்துவாக இருப்பின் அவரது காதுகளில் ராம் ராம் என்றும், முஸ்லிமாக இருப்பின் அவரது காதுகளில் சலாம் என்று கூறுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
பிறகு, மரண தண்டனையை நிறைவேற்றும் நபர், நான் என்ன செய்வது, எனது கைகள் கடமையால் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவார்.
சிறைத்துறை கண்காணிப்பாளர், நிர்வாக மேஜிஸ்திரேட், மரண தண்டனையை நிறைவேற்றுபவர் மற்றும் ஒரு மருத்துவர் கட்டாயமாக மரண தண்டனை நிறைவேற்றும்போது இருக்க வேண்டும். இதில் ஒருவர் இல்லாவிடிலும் மரண தண்டனை நிறைவேற்றப்படாது.