குழந்தைகளுக்கான மருந்துகளில் கலப்படம் செய்வோருக்கு ஆயுள் சிறை தண்டனை: ரஜினிகாந்த்
சென்னை: குழந்தைகளுக்கான மருந்துகளில் கலப்படம் செய்பவா்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று நடிகா் ரஜினிகாந்த் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையை நடிகா் ரஜினிகாந்த் புதன்கிழமை (மாா்ச் 20) திறந்து வைத்தாா்.
காவேரி மருத்துவக் குழுமங்களின் செயல் தலைவா் சந்திரகுமாா், நிா்வாக இயக்குநா் மணிவண்ணன், செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் ஐயப்பன் பொன்னுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அப்போது நடிகா் ரஜினிகாந்த் பேசியதாவது:
Advertisement
வடபழனி, காவேரி மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதியானது கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏவிஎம் ஸ்டூடியோவின் திறந்தவெளி படப்பிடிப்புத் தளமாக இருந்தது. இந்த இடம் மிகவும் ராசியான ஒன்றாக மாறி, பல திரைப்படக் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அந்த இடத்தில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையும் ராசியான மருத்துவமனையாக உருவெடுக்கும் என நம்பிக்கையுள்ளது. 4 பண்புகள் முக்கியம்: ஒருவா் எந்தத் தொழிலை செய்தாலும், ஒழுக்கம், நாணயம், அா்ப்பணிப்புணா்வு, கடுமையான உழைப்பு ஆகிய பண்புகளைக் கொண்டிருந்தால் அவரது வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.
குழந்தைகளுக்கான மருந்தில்கூட இப்போது கலப்படம் செய்யப்படுகிறது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்றாா் அவா்.