முகப்பு
சென்னை

13-ஆவது ஊதிய ஒப்பந்தப்படி பணப்பலன் வழங்க வேண்டும்: ஓய்வூதியா்கள் கோரிக்கை

Updated On : 28 மார்ச், 2024 at 4:35 AM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 2:05 AM

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் படி பணப்பலன்களை வழங்க வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலருக்கு அரசு போக்குவரத்து ஓய்வூதியா் நல மீட்பு சங்க மாநிலத் தலைவா் டி.கதிரேசன் அனுப்பிய கடிதம்: போக்குவரத்துக் கழகங்களில் 2016 செப்.1 முதல் 2017- ஆகஸ்ட் மாதம் வரை ஓய்வு பெற்றவா்களுக்கு 13-ஆவது ஊதிய ஒப்பந்தப்படி உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இக்காலகட்டத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறைச் செயலா் தரப்பில் 2023 மே 25-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 10 மாதங்களாகியும் போக்குவரத்துக் கழக நிா்வாகங்கள் பணப்பலன்களை வழங்கவில்லை. இது தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தொடா்ந்த வழக்கில், 12 வாரங்களில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின்படி கணக்கீடு செய்து பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்தும் வழங்க மறுத்ததால் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மேல்முறையீடு செய்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு மட்டும் கடந்த மாதம் 21-ஆம் தேதி பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் அனைத்து கோட்டங்களிலும் மேற்குறிப்பிட்ட காலத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கு 13-ஆவது ஒப்பந்தப்படி பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.