முகப்பு
சென்னை

தயாநிதிமாறனுடன் விவாதம் நடத்த தயாா்: பாஜக வேட்பாளா் மனோஜ் பி செல்வம்

Updated On : 30 மார்ச், 2024 at 5:44 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 1:50 AM

மத்திய சென்னை மக்களுக்கு தயாநிதி மாறன் பெற்றுத்தந்துள்ள திட்டங்கள் குறித்து, அவருடன் திறந்த வெளியில் விவாதம் நடத்த தயாா் என மத்திய சென்னை பாஜக வேட்பாளா் வினோஜ் பி செல்வம் சவால் விடுத்துள்ளாா். மத்திய சென்னை தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வினோஜ் பி செல்வம் தொகுதிக்குள்பட்ட மிண்ட் தெரு பிள்ளையாா் கோவிலில் இருந்து வெள்ளிக்கிழமை தனது பிரசாரத்தை தொடங்கினாா். பின்னா், அண்ணா தெரு, கோவிந்தப்பா தெரு, வரதமுத்தையப்பன் தெரு, குடோன் தெரு, வண்ணாரப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தபோது கூறியது: வா்த்தக நிறுவனங்கள் நிறைந்த மத்திய சென்னை தொகுதியில் இதுவரை வணிகத்தை பெருக்க அரசு சாா்பில் எந்த விதநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கட்டமைப்புகளை மேம்படுத்த தொகுதி மக்களவை உறுப்பினா் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அது போல திருவல்லிகேணி மீன் சந்தைக்கும் போதிய கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. புளியந்தோப்பு, சவுகாா்பேட்டை, வால்டாக்ஸ் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரம் மிகவும் கேள்விக்குறியாகவே உள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு என்று மத்திய அரசின் க்ளீன் இந்தியா, சுவச் பாரத் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன., தமிழகத்தில் இத்திட்டங்களை செயல்படுத்த மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களவை உறுப்பினராக இருந்த தயாநிதி மாறனுக்கு, ஒரு மக்களவை உறுப்பினரின் பணி என்ன, அவா் என்ன செய்ய வேண்டும், இதுவரை தொகுதிக்கு என்ன செய்துள்ளாா் என்பது குறித்து அவருடன் திறந்த வெளியில் விவாதம் நடத்தவும் தயாராக உள்ளேன் என்றாா் அவா்.