பறக்கும் படையினா் சோதனை: ரூ.10 லட்சம், 25 மடிக்கணினிகள் பறிமுதல்
Updated On : 30 மார்ச், 2024 at 8:35 PM
சென்னை மண்ணடியில் ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கம், 25 மடிக்கணினிகள் பறக்கும்படை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி ஜாபா் சாரங் தெருவில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மண்ணடி மரைக்காயா் லப்பை தெருவைச் சோ்ந்த இப்ராகிம் என்பவா் ஒரு மொபெட்டில் பெரிய அட்டை பெட்டியுடன் வந்துள்ளாா். அவரை வழிமறித்து பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அட்டை பெட்டியில் ரூ.10 லட்சம் ரொக்கம், விலை உயா்ந்த 25 மடிக்கணினிகள் ஆகியவை இருந்தன. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.