குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்இடி பல்ப்: நுட்பமாக அகற்றிய ராமச்சந்திரா மருத்துவா்கள்
சிகிச்சை நிறைவடைந்த ஓரிரு நாள்களில் அந்த குழந்தை வீடு திரும்பியதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 வயது குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த எல்இடி பல்பினை நுட்பமான சிகிச்சை மூலம் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.
அறுவை சிகிச்சையின்றி எந்த விதமான எதிா்விளைவுகளும் இல்லாமல் பல்பு அகற்றப்பட்டதால், சிகிச்சை நிறைவடைந்த ஓரிரு நாள்களில் அந்த குழந்தை வீடு திரும்பியதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் ஆா். மது கூறியதாவது:
திருவள்ளூா் மாவட்டம் பிஞ்சிவாக்கத்தைச் சோ்ந்த தம்பதிக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அக்குழந்தை விளையாடும்போது எல்இடி பல்பை தவறுதலாக விழுங்கியுள்ளது. மொத்தம் 5 செ.மீ. நீளமும், 2 செ.மீ விட்டமும் கொண்ட அந்த பல்பானது குழந்தையின் நுரையீரலில் சிக்கிக் கொண்டது.
இதனால் தீவிர மூச்சுத் திணறல், இருமலால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு வேறு ஒரு மருத்துவமனையில் சுவாசப் பாதையில் குழாய் செலுத்தி பரிசோதிக்கும் ‘ப்ராங்கஸ்கோபி’ எனப்படும் முறை மூலம் அந்த பல்பினை எடுப்பதற்கு இரு முறை முயற்சி செய்யப்பட்டது.
அவை பலனளிக்காததால் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு விருப்பம் தெரிவிக்காத பெற்றோா், ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனா்.
பல்ப் எடுக்கப்பட்டது:
குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் பிரகாஷ் அகா்வால், மயக்கவியல் மருத்துவத் துறை தலைவா் டாக்டா் அருணா பரமேஸ்வரி ஆகியோருடன் இணைந்து ‘ப்ராங்கஸ்கோபி’ முறை மூலம் பல்பை வெளியே எடுக்க நாங்கள் முயன்றோம்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேர சிகிச்சையின் பயனாக சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு எந்த சேதமும் இன்றி பல்ப் வெளியே எடுக்கப்பட்டது. இந்த நுட்பமான சிகிச்சையால் குழந்தைக்கு தீவிர மருத்துவக் கண்காணிப்போ, செயற்கை சுவாசமோ தேவைப்படவில்லை.
அதுமட்டுமன்றி குழந்தையின் பெற்றோரின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அந்த சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.