முகப்பு
சென்னை

தியாகராய நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்

Updated On : 3 மே, 2024 at 7:18 PM
பகிர்:

சென்னை தியாகராய நகரில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வரும் கடைகளை ஒரு வாரத்தில் அகற்றுமாறு சென்னை மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகா் ரங்கநாதன் தெரு, நடேசன் தெரு, மாம்பலம் ரயில் நிலைய பகுதிகளில் அனுமதியின்றி சாலையோரத்தில் ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், பாதசாரிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வரும் கடைகளை ஒரு வாரத்தில் அகற்றுமாறு சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை அதன் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் காலி செய்யவில்லை என்றால் அந்த கடைகள் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.