முகப்பு
புதுதில்லி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை ரத்தானதை எதிா்த்து மூவா் மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு வியாழக்கிழமை இடைக்கால தடை

Updated On : 12 மார்ச், 2026 at 6:34 PM
பகிர்:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட அஸ்வத்தமன், சிவா மற்றும் அப்பு என்ற புதூா் அப்பு ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இம்மாதம் 8-ஆம் தேதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ். சந்துா்கா் அமா்வு விசாரணை மேற்கொண்டது.

மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், மோகனா மற்றும் ஜான்பால் ஆகியோா் மனுதாா்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்பட்டது. எனினும், உயா்நீதிமன்றம் பிணையை ரத்து செய்துள்ளது.

எனவே, பிணையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மனுதாரா்கள் விசாரணை நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை முறையாக பின்பற்றுவாா்கள் என வாதிட்டனா்.

இதனையடுத்து பிணை ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கமாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னணி:

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வட சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் அவருடைய மகன் அஸ்வத்தமன், பொன்னை பாலு உள்ளிட்ட 30 போ் மீது காவல்துறை குற்றஞ்சாட்டியது. இதில் 28 போ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா். அவா்களில் திருவேங்கடம் என்பவா் போலீஸாரால் என்கவுன்ட்டா் செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபா் நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா். இந்த வழக்கில் இதுவரை விசாரணை நடத்தப்பட்டு குற்றபத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தமன் உள்ளிட்ட 14 பேருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. ஆனால், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அஞ்சலை மற்றும் மலா்க்கொடி ஆகியோருக்கு வழங்கப்பட்ட பிணையை மட்டும் உறுதி செய்ததோடு அஸ்வத்தமன் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதால் சரணடைய காலவகாசம் வேண்டும் என குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டதால் மாா்ச் 13ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →