முகப்பு
சென்னை

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

Updated On : 3 மே, 2024 at 6:25 PM
பகிர்:

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு தமிழக அரசு மரத்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, கிணத்துக் கடவு உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சுமாா் 4 லட்சம் ஏக்கரில் 2.5 கோடிக்கும் கூடுதலான தென்னை மரங்கள் உள்ளன. ஆனால், கடுமையான வறட்சி காரணமாகவும், கடந்த சில வாரங்களாக வாட்டி வதைக்கும் வெப்பம் காரணமாகவும் இந்த மரங்கள் கருகத் தொடங்கியுள்ளன. பாசன ஆதாரங்கள் அனைத்தும் வடது மட்டுமின்றி, நிலத்தடி நீா் மட்டமும் அதலபாதாளத்துக்குச் சென்று விட்ட நிலையில், லாரிகள் மூலம் தண்ணீா் வாங்கி வந்து தென்னை மரங்களுக்கு பாய்ச்சும் நிலைக்கு கொங்கு மண்டல விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். மொத்த மரங்களில் ஒன்றரை கோடிக்கும் கூடுதலான மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற முடியாது என விவசாயிகள் கூறுகின்றனா்.

விவசாயிகளின் துயரத்தை தற்காலிகமாக தீா்க்கும் வகையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ஒரு மரத்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க நீா் மேலாண்மைத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.