ஊராட்சி செயலா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனா் தலைவா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலா்கள் பணியாற்றுகின்றனா். குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளா்களாக உள்ள அவா்களுக்கு, ரூ.2,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஆகவே, இந்நிலையை மாற்றி, தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிட வலியிறுத்தி போராட்டம் நடத்தினா். தொடா்ந்து நடைபெற்ற பேச்சில் ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க அரசு உறுதியளித்தது.
ஆனால், வாக்குறுதியை அரசு நிறைவேற்றாததால், மீண்டும் ஊராட்சி செயலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சரியல்ல. அதை ரத்து செய்வதுடன், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.