முகப்பு
சென்னை

வாகன ஓட்டிகளுக்கு நிழற் பந்தல்

Updated On : 3 மே, 2024 at 5:36 PM
பகிர்:

வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளைக் காக்கும் வகையில் சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் ஒரு வாரத்தில் நிழற்பந்தல் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னையில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் 2 நிமிஷங்கள் காத்திருக்கும்போது வெயிலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

வாகன ஓட்டிகளைப் பாதுகாக்கும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் சிக்னல் சந்திப்புகளில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், சென்னையிலும் போக்குவரத்து சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

சென்னையில் முக்கிய சாலை சந்திப்புகளில் நிழற்பந்தல் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சென்னையின் 10 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் அந்த இடங்களில் நிழற்பந்தல் அமைக்கப்படும். இதற்கான பணிகள் சனிக்கிழமை முதல் தொடங்கப்படும்.

அதேபோல், பயணிகளின் வசதிக்காக, தற்காலிக பந்தல் அமைத்து கொடுக்க மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.