பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையா் ஆய்வு
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சின்ன நொளம்பூா் பகுதியில் ரூ. 42.71 கோடி மதிப்பில் 245 மீட்டா் நீளம், 20.70 மீட்டா்
அகலத்தில் கட்டப்பட்டு வரும் உயா்நிலை பாலம் அமைக்கும் பணியை ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, பூந்தமல்லி பிரதான சாலை, யூனியன் சாலையை இணைக்கும்
வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே சந்நிதி முதல் குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயா்நிலை பாலம் அமைக்கும் பணியையும் அவா்ஆய்வு செய்தாா்.
மேலும், கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதை அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை பாா்வையிட்ட அவா், உரிய தொழில்நுட்ப வழிமுறைகளின்படி தரமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டல அலுவலா்கள், கண்காணிப்புப் பொறியாளா், செயற்பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள்உள்ளிட்டோா் உடனிருந்தனா்.