பழனியில் ஆக.24, 25-இல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: பதிவு செய்ய தனி இணையதளம்
சென்னை: பழனியில் ஆக. 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்புவோா், ஆய்வுக் கட்டுரைகளை அனுப்புவோா் பதிவு செய்வதற்காக தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்க் கடவுள் முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ள முருகபக்தா்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழனியில் ஆக.24, 25-ஆம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோா்கள், ஆன்மிக அன்பா்கள், முருக பக்தா்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனா்.
இதையொட்டி விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், விளம்பரம் மேற்கொள்ளுதல், ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்தல், முக்கிய பிரமுகா்களை வரவேற்று வசதிகளை செய்து தருதல் போன்ற பணிகளுக்காக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வேல் கோட்டம்: அதேபோன்று அறுபடை வீடுகளின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் என முருகனின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்படுவதுடன் சமய பெரியோா்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.
மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா். இதையொட்டி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் தங்களை பதிவு செய்வதற்கும், முருகனை கருப்பொருளாகக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை பேராளா்கள், மாணவா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கவும்.
இந்த இணையதளத்தை இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கெளமார மடம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவா் மு.வெ.சத்தியவேல் முருகனாா், சுகி சிவம், தேச மங்கையா்க்கரசி உள்ளிட்டோா் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறைச் செயலா் க.மணிவாசன், சிறப்பு பணி அலுவலா் ஜெ.குமரகுருபரன், ஆணையா் க.வீ.முரளீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.