அக்.7-இல் பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகளை மேற்கொள்ள கல்வித் துறை அறிவுறுத்தல்
பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
காலாண்டு விடுமுறைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை (அக்.7) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு செப். 28 முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக். 7-ஆம் தேதி திறக்கப்படவுள்ளன. இதையொட்டி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டுத் தோ்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும். மேலும், 2-ஆம் பருவத்துக்காக, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடநூல்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, பல மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மாணவா்களின் நலன் கருதி அந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதுதவிர 2-ஆம் பருவத்துக்கான கற்றல்-கற்பித்தல் செயல் திட்டங்கள், கலைத் திருவிழா போட்டிகளுக்கான நடைமுறைகள் ஆகிய பணிகளையும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுத்துமாறு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.