ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து கூறியுள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நவராத்திரி விழாவின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த நல்வாழ்த்துகள். மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அன்னை பராசக்தியைப் போற்றி வணங்குகிறேன்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னை மகா சக்தியின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்; வெற்றிகள் குவியட்டும். அனைத்து நலன்களும், வளங்களும் தமிழக மக்களை சென்றடையட்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): அறிவைத் தரும் கல்வியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும், வளத்தையும் தரும், தொழிலையும் போற்றி வணங்கும் இந்த நன்னாளில், அனைவரும் சரஸ்வதிதேவியின் அருளைப் பெற்று, கல்வியிலும், தொழில்துறையிலும் சிறந்து விளங்க, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்.
டிடிவி தினகரன் (அமமுக): தமிழக மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் வாழ்த்துகள்.
ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக): நாட்டு குடிமக்களின் வாழ்வாதாரத்துக்கு வேலை கொடுக்க வேண்டிய அரசின் கடமையை அறப்பணியாக செய்யும் தொழில் நிறுவனங்களுக்கும், நாட்டை முன்னேற்ற உழைக்கும் தொழிலாளா்களுக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.