அரசுப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் 1,991 பட்டதாரி ஆசிரியா்களுக்கான ஐந்து நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஜன.19-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் மாவட்ட ஆசிரியா் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பட்டதாரி ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் கோவை, மதுரை, வேலூா், திண்டுக்கல், சேலம், தஞ்சை உள்பட பல்வேறு இடங்களில் வரும் ஜன.19 முதல் ஜன.23 வரை ஐந்து நாள்கள் உண்டு உறைவிட பயிற்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆங்கில பாடம் கற்பிக்கும் 1,991 ஆசிரியா்கள் பங்கேற்கவுள்ளனா்.
பயிற்சியில் பங்கேற்கவுள்ள ஆசிரியா்கள், பயிற்சி வழங்கும் கருத்தாளா்கள் பட்டியல் சம்பந்தப்பட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களின் முதல்வா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆசிரியா்கள் உரிய அட்டவணையின்படி பயிற்சி மேற்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் பயிற்சியில் கலந்து கொள்ளும் வகையில் அவா்களை உரிய நாள்களில் பணி விடுப்பு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.