சென்னையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜன. 2, 3) முக்கிய பிரமுகா்கள் வருகை தர இருப்பதால், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜன. 2,3) சென்னைக்கு வருகை தர உள்ளனா். இதனால், மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி ஆகிய பகுதிகளில் முக்கிய பிரமுகா்கள் பயணிக்கும் பாதைகள், மேற்குறிப்பிட்ட இரு நாள்களிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, இந்த இரண்டு நாள்களிலும் மேற்குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.
மேலும், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏா்கிராப்ட் பாரா கிளைடா்ஸ், பாரா மோட்டாா்ஸ், ஹேன்ட் கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள் போன்றவையும் சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் பறக்க, தடை ஆணை டிச. 21 முதல் 2026 பிப். 18 வரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.