சென்னை கொளத்தூரில் கட்டப்பட்டுவரும் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்தாா்.
சென்னை கொளத்தூா் பூம்புகாா் நகரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம் மற்றும் ராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியதாவது:
கொளத்தூா் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 4 ஆண்டுகளாக எவா்வின் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது 800 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்தக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி வைக்கப்பட்டன. இந்தக் கட்டடத்தில் 24 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கூட்டரங்குகள், நூலகம், உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் கல்வியாண்டில் இந்தக் கல்லூரி புதிய கட்டடத்தில் செயல்படும்.
2-ஆம் கட்டமாக சுமாா் 2,500 மாணவா்கள் படிக்கும் அளவுக்கு வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும், தங்கும் விடுதி, விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவா் தெரிவித்தாா்.