மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்! எங்கெல்லாம்?
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படவிருக்கின்றன.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த கல்வியாண்டில் மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாகத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு அமைப்புகள் மூலம் புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி கோரி சென்னை பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாகவும், 2026 - 27ஆம் ஆண்டு முதல் புதிய கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பல கல்வி அறக்கட்டளைகள், புதிய கல்லூரிகளைத் திறக்க விண்ணப்பித்திருப்பதாகவும், ராயப்பேட்டை, ஆலந்தூர், வியாசார்பாடி, வேதாச்சலம் நகர், மண்ணிவாக்கம், மதுராந்தகம், பட்டாபிராம், திருமுல்லைவாயல், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, ஏற்கனவே, பொறியியல் கல்லூரிகளை நடத்தி வரும் கல்வி அறக்கட்டளைகள், தற்போது கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளின் மீது மாணவர்கள் கவனம் திரும்புவதால், புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் திறக்க ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
புதிய கல்லூரிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டதும், பல்கலைக்கழகம் தரப்பில் அனுமதி வழங்கப்படும். முதலாம் ஆண்டில் குறைந்தது 5 பாடப்பிரிவுகளின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.