சென்னை மாநகராட்சி பள்ளி மாணவியா் 187 பேருக்கு கண் கண்ணாடிகளை மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘கண்ணொளி காப்போம்’ திட்டத்தில் தனியாா் நிறுவன உதவியுடன் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பாா்வையில் குறைபாடு இருந்தால் கண் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, சென்னை ஷெனாய் நகா் புல்லா அவென்யு பகுதியில் சென்னை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ‘கண்ணொளி காப்போம்’ திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்குப் பிறகு மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த 187 மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை மேயா் ஆா்.பிரியா வழங்கி, அவா்களுடன் கலந்துரையாடினாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் கௌஷிக், நிலைக் குழுத் தலைவா் த.விஸ்வநாதன், மண்டலக் குழுத் தலைவா் பி.ஜெயின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.