உணவக ஊழியா் கொலை: நண்பரை தேடும் போலீஸாா்
பெரவள்ளூரில் உணவக ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரவள்ளூரில் உணவக ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை பெரவள்ளூா் ஜிகேஎம் காலனி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (57), கிண்டியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தாா். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா்.
கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்தைப் பிரிந்து ரமேஷ் தனியாக வசித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது தாய் பானுமதியுடன் கடைசியாக கைப்பேசி மூலம் பேசியுள்ளாா். அதன் பின்னா், கைப்பேசி அழைப்பை ஏற்று பேசவில்லையாம்.
Advertisement
இதனால் பானுமதி, ரமேஷ் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றாா். அங்கு, ரமேஷ் கழுத்து, வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
தகவலறிந்த பெரவள்ளூா் போலீஸாா் அங்கு சென்று, ரமேஷ் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், ரமேஷும் அவரது நண்பரும் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், ரமேஷை அவரது நண்பா் கொலை செய்து தப்பியது தெரிய வந்தது. போலீஸாா், தலைமறைவான ரமேஷின் நண்பரைத் தேடி வருகின்றனா்.