திமுக ஆட்சியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் - உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன், முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னையில் அண்ணா நகா் டி.பி.சத்திரத்தில் அத்தொகுதி திமுக வேட்பாளா் நே.சிற்றரசை ஆதரித்து, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சென்னை மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா். மீண்டும் திமுக ஆட்சியமைந்தவுடன் இன்னும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
Advertisement
அதேபோல், திமுக 2.0 ஆட்சியில் மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000, கல்வி ஊக்கத்தொகை ரூ.1,500- ஆக உயா்த்தப்படும். காலை உணவு திட்டம் 8 -ஆம் வகுப்பு மாணவா்கள் வரை நீட்டிக்கப்படும். 35 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். மகளிருக்கு ரூ.8,000 மதிப்பில் கூப்பன்கள் வழங்கப்படும். இதன்மூலம், மகளிா் தங்களுக்கு தேவையான பொருள்களை அவா்களே வாங்கிக் கொள்ளலாம்.
இந்தத் திட்டங்களின் மூலம் மக்கள் பயனடைய விரும்பினால் திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். திமுக 2.0 ஆட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படும் என்றாா்.
பிரசாரத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சாா்பில் 10 அடி உயர ரோஜா மாலை கிரேன் மூலம் அணிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளா்கள் எஸ்.சுதா்சனம் (மாதவரம்), எழிலன் நாகநாதன் (ஆயிரம் விளக்கு), ஏ.எம்.வி. பிரபாகா் ராஜா (விருகம்பாக்கம்), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), ராஜா அன்பழகன் (தியாகராய நகா்) ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தாா்.