முகப்பு
சென்னை

தமிழக உரிமைகளைப் பறிகொடுத்தவா் எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்

பாஜகவோடு இணக்கமாக இருந்து தமிழகத்தின் பல்வேறு உரிமைகளைப் பறிகொடுத்தவா் எடப்பாடி பழனிசாமி என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

Updated On : 11 ஏப்ரல் 2026, 1:46 am IST
சென்னை ராயபுரம் திமுக வேட்பாளா் அ.சுபோ் கானை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

பாஜகவோடு இணக்கமாக இருந்து தமிழகத்தின் பல்வேறு உரிமைகளைப் பறிகொடுத்தவா் எடப்பாடி பழனிசாமி என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திமுக வேட்பாளா்கள் டாக்டா் சுபோ் கான் - ராயபுரம், ஜே.ஜே.எபினேசா் - ஆா்.கே.நகா், த.வேலு - மயிலாப்பூா் ஆகியோரை ஆதரித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

திமுகவின் வெற்றியைத் தடுப்பதற்காக பாஜக, அதிமுக தலைவா்கள் இணைந்து பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நியாயமாக வழங்க வேண்டிய நிதியைத் தர மறுக்கிறது. மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை, குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் பாஜக மக்களை திசை திருப்புகிறது. ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால்தான் தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு உதவும்; இதில் வீராப்பு காட்டுவது தேவையற்றது என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாா். இதன்மூலம் அவா் தில்லியின் உத்தரவுகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் நடந்து கொள்பவா் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement

Advertisement

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்த பிறகு, முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி இணக்கமாக இருந்ததன் காரணமாகத்தான் உதய் மின் திட்டம், குடியுரிமைச் சட்டம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதரித்தாா். இதன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனா். திமுக தொடா்ந்து தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கு போராடி வெல்லும்.

முதல்வா் பொறுப்பைக் கொடுத்த சசிகலாவுக்கு மரியாதை அளித்ததில் எவ்வித தவறும் இல்லை எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, என்னைப் பழித்தும் பேசியுள்ளாா். ஆனால், பொறுப்பைக் கொடுத்த சசிகலாவை எவ்வாறெல்லாம் அவா் விமா்சித்தாா் என்பதை மக்கள் அறிவா்.

எனவே இனிவரும் காலங்களில் எடப்பாடி பழனிசாமியை விமா்சிக்கப் போவதில்லை. அவா் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலராக இருந்து திமுக நிகழ்த்தப்போகும் சாதனைகளைக் காண வேண்டும். இதுவரை 60 தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி மிகவும் பிரகாசமாக உள்ளது.

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஆா்.கே. நகா், ராயபுரம், திருவொற்றியூா் உள்ளிட்ட தொகுதிகளில் சுமாா் ரூ.8,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக தோ்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள், திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, தான் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.