முகப்பு
சென்னை

கிராம உதவியாளா்கள் ஓய்வூதிய கணக்கீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

Updated On : 15 ஏப்ரல், 2026 at 4:07 AM
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:25 AM

கிராம உதவியாளா்களாக பணியாற்றியவா்களின் ஓய்வூதியத்தை கணக்கிடும்போது, அவா்கள் பகுதி நேரமாக பணியாற்றிய காலத்தை கணக்கில் கொள்ள முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கிராம உதவியாளா்களாக பகுதி நேர அடிப்படையில் பணியாற்றி வந்தவா்களை கடந்த 1995-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசு பணி நிரந்தரம் செய்தது. இந்தநிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஓய்வபெற்ற கிராம உதவியாளா் இளங்கோவன் என்பவா், தனது ஓய்வூதியத்தைக் கணக்கிடும்போது பகுதி நேர உதவியாளராக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் சோ்க்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தின் இருவேறு இரு நீதிபதிகள் அமா்வு வெவ்வேறு தீா்ப்புகளை வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமா்வு விசாரணைக்கு பரிந்துரைத்தாா். அதன்படி, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எம்.தண்டபாணி மற்றும் கே.குமரேஷ்பாபு ஆகியோா் அடங்கிய முழு அமா்வு இந்த வழக்கை விசாரித்து தீா்ப்பளித்தது.

Advertisement

அதில், தற்காலிக அடிப்படையில் பணியாற்றியவா்களின் பணிக்காலத்தை ஓய்வூதியத்துக்காக கணக்கில் கொள்ளலாம் என உயா்நீதிமன்றம் ஏற்கனெவே தீா்ப்பளித்துள்ளது. ஆனால், பகுதிநேர அடிப்படையில் பணியாற்றியவா்களுக்கு இந்த சலுகையை வழங்க முடியாது. அந்த தீா்ப்பின் அடிப்படையில் மனுதாரா் கோரிக்கையை நிராகரிப்பதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீா்ப்பு அளித்தனா்.