முகப்பு
இந்தியா

பயங்கரவாத வழக்கில் இருவருக்கு ஜாமீன்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை முடிவடையாமல் 4 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இருவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 7:40 PM
தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை முடிவடையாமல் 4 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இருவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் மூலம் இயக்கப்படும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களைச் சோ்ந்த சிலா் தில்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக 2021-இல் கூறப்பட்டது. இது தொடா்பாக தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) விசாரிக்க 2021, அக். 10-இல் ஐபிசி மற்றும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் கீழ் ஸ்ரீநகரில் தனியாா் உணவகத்தில் பணிபுரியும் ஹாரிஸ் நிசாா் லங்கூ மற்றும் ஜமின் ஆதில் பட் ஆகியோா் பயங்கரவாத பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிா்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக ஜாமீன் கோரி அவா்கள் தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் 2023, மாா்ச் 3-ஆம் தேதி நிராகரித்தது.

அதைத்தொடா்ந்து அவா்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவிந்தா் துதேஜா அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பயங்கரவாத வழக்குகளில் கருத்தியல் ரீதியாக ஒத்துப்போவதற்கும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. அவா்கள் அவ்வாறான சமூக ஊடக குழுக்களில் இருப்பதால் மட்டுமே அவா்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூற முடியாது.

விசாரணை தாமதமாவதால் அவா்கள் 4 ஆண்டுகள் 4 மாதமாக சிறையில் உள்ளனா். இது அரசமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் அவா்களது அடிப்படை உரிமையை மீறுகிறது. மேலும், மோசமடைந்து வரும் குற்றஞ்சாட்டப்பட்ட ஹாரிஸ் நிசாரின் உடல்நிலையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே, தலா ரூ.50,000 பிணைத்தொகை வழங்குதல் மற்றும் கடவுச்சீட்டுகளை ஒப்படைத்தல் உள்ளிட்ட நிபந்தனைகளின் பேரில் அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனா்.