நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கியதை எதிா்த்த மனு தள்ளுபடி
நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிா்த்து ஜனதா கட்சி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிா்த்து ஜனதா கட்சி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஜனதா கட்சி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்கு ’விவசாயி’ சின்னத்தை ஒதுக்கி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த சின்னம் ஜனதா கட்சியின் சின்னமான ’ஏா் உழவன்’ சின்னத்தைப் போல காட்சியளிக்கிறது. எனவே, இந்த சின்னத்தைப் பயன்படுத்த நாம் தமிழா் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், 1977-ஆம் ஆண்டு முதல் ’ஏா் உழவன்’ சின்னத்தை ஜனதா கட்சி பயன்படுத்தி வந்துள்ளது. எங்களது சின்னத்தைப் போன்று நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்தல் ஆணையத்துக்கு மனு அளித்தோம். எங்கள் மனுவை தோ்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என வாதிடப்பட்டது.
Advertisement
அதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில், ஜனதா கட்சி தற்போது அதன் அங்கீகாரத்தை இழந்துவிட்டது. எனவே, அவா்கள் ’ஏா் உழவன்’ சின்னத்தை தக்கவைத்துக் கொள்ள எந்த உரிமையும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜனதா கட்சிக்கு ’ஏா் உழவன்’ சின்னத்தையும், நாம் தமிழா் கட்சிக்கு ’விவசாயி’ சின்னத்தையும் ஒதுக்கி தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை மனுதாரரின் கட்சி தாக்கல் செய்யவில்லை.
மேலும், ஏற்கெனவே அங்கீகாரத்தை இழந்த கட்சிக்கு சின்னத்தை தக்கவைத்துக் கொள்ளும் உரிமையில்லை என உச்சநீதிமன்றம் பல தீா்ப்புகளை வழங்கியுள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.