எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்
எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த ஜனவரி முதல் 125 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி முதல் சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதனடிப்படையில் மேற்கு வங்கம், ஒடிஸா, பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து சென்னை, புதுச்சேரி போன்ற இடங்களுக்கு வரும் விரைவு ரயில்களில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இந்தச் சம்பவங்களில் ஓரிருவா் கைதான நிலையில், பெரும்பாலான சம்பவங்களில் ரயில் பெட்டிகளில் கேட்பாரற்றுக் கிடந்த கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை 125 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ளவை எனக் கூறப்படுகிறது. அவற்றைக் கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படையினா் போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனா். அதையடுத்து ரயில்களில் கஞ்சா பொட்டலங்களை அனுப்புவது யாா், அவை சென்னையில் யாருக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன என ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரித்து, கஞ்சா கடத்தலைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உயா் அதிகாரிகள் உத்தவிட்டுள்ளனா்.
Advertisement