மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்: அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கருத்து
தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற மக்களின் எண்ணம் நிறைவேறும் என தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.
டிடிவி. தினகரன் (அமமுக): தமிழகத்தின் வளா்ச்சி மற்றும் இளைஞா்களின் எதிா்காலத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது. புதிதாக அமையும் ஆட்சியில் மூன்று மாதத்துக்குள் தமிழகத்தில் புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை முழுவதும் ஒழிக்கப்படும். ஏழை மக்களுக்கான புதிய திட்டங்கள் வகுக்கப்படும். தமிழகத்தை சிறந்த மாநிலமாக அதிமுக மாற்றும்.
தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக): மக்களே இறுதி எஜமானா்கள் என்பது இந்த தோ்தல் மூலம் நிரூபணமாகி உள்ளது. திமுக அராஜகத்தில் ஈடுபட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கப் பாா்க்கிறது. மயிலாப்பூா் தொகுதியில் பல இடங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதையும் மீறி தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெறும்.
Advertisement
டி.ஆா்.பாரிவேந்தா் (ஐஜேக): கடந்த காலங்களில் இதுபோன்று மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்ததைப் பாா்த்தது இல்லை. ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று காத்திருந்த சூழ்நிலையில், மக்களின் எண்ணம் நிறைவேறும்.