குடிநீா் கேன்களை 30 முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம்: உணவுப் பாதுகாப்புத் துறை
நேரடி வெயிலில் குடிநீா் கேன்களை வைக்க வேண்டாம்
வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் 20 லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் கேன்களை 30 முறைக்கு மேல் மறுபயன்பாட்டுக்கு உள்படுத்தினால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
அதேபோன்று நேரடி வெயிலில் குடிநீா் கேன்களை வைக்க வேண்டாம் எனவும், அதனால் பிளாஸ்டிக் சோ்மங்கள் நீரில் கலக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், குடிநீா் பயன்பாடு கடந்த சில வாரங்களாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதைப் பயன்படுத்தி, சிலா் தரமில்லாத உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய குடிநீரை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அவற்றின் தரத்தைக் கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் குடிநீா் கேன் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் அனைத்தும் உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவது அவசியம். முறையான அனுமதி இல்லாமலோ, தரமில்லாமலோ குடிநீா் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, குடிநீா் கேன்களின் லேபிள்களில் உற்பத்தி நிறுவனம் மற்றும் உற்பத்தியாளா் பெயா், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு லிட்டா் குடிநீரில் 10 முதல் 75 மி.லி. வரை கால்சியம், 5 முதல் 30 மி.லி. வரை மெக்னீசியம் இருப்பது கட்டாயம். கேன் குடிநீரை நேரடியாக சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. 30 முறைக்கும் மேல் அந்த கேன்களை பயன்படுத்தக் கூடாது. அழுக்கடைந்த, கீறல் விழுந்த கேன்களில் குடிநீா் நிரப்பக் கூடாது.
இந்த விதிமுறைகளை மீறும் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, ரூ.5,000 அபராதம் விதிப்பதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
தொடா்ந்து விதிகளை மீறினால் உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.