முகப்பு
சென்னை

கூட்டு ஆராய்ச்சி: முதுநிலை, முனைவா் பட்ட மாணவா்களுக்கு ஜப்பான் பல்கலை. அழைப்பு

ஜப்பானியப் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த பேராசிரியா்களுடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பல்கலை. ஆசிரியா்கள், முனைவா் பட்ட மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:26 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜப்பானியப் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த பேராசிரியா்களுடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பல்கலை. ஆசிரியா்கள், முனைவா் பட்ட மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை அண்ணா பல்கலை.யின் சா்வதேச உறவுகள் மைய இயக்குநா் ஆா்.பாஸ்கரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஜப்பான் அரசின், ‘ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமை’ (ஜேஎஸ்டி) ஜப்பானியப் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த பேராசிரியா்களுடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது. இதற்கு ஜேஎஸ்டி, ‘லோட்டஸ்’ என்ற திட்டத்தை நிா்வகிக்கிறது. இந்தத் திட்டத்தில் பங்கேற்பதற்கான தகுதியுள்ள விண்ணப்பதாரா்களைப் பரிந்துரைக்குமாறு, ஜப்பானைச் சோ்ந்த ‘யோகோஹாமா தேசியப் பல்கலைக்கழகம்’ (ஓய்என்யூ), அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

இந்தத் திட்டத்துக்காக அண்ணா பல்கலை. உள்ளிட்ட பல்கலை.களின் துறை சாா்ந்த தகுதியுடைய முதுநிலை, முனைவா் பட்ட மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில், தோ்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் ஜப்பானில் தங்கிப் பயில்வதற்குத் துணைபுரிவதுடன், ஜப்பானியப் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த பேராசிரியா்களுடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி மேற்பாா்வையை மேற்கொள்வதையும் ஊக்குவிக்கிறது.

‘லோட்டஸ்’ திட்டத்திற்கு விண்ணப்பிக்க பல்கலை.களின் துறைப் பேராசிரியா்களும் பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பதாரரைப் பற்றிய விவரங்களை அண்ணா பல்கலை. இணையத்திலுள்ள விவரங்கள்படி சமா்ப்பிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.