முகப்பு
சென்னை

பரந்தூா் விமான நிலையம்: நிலம் வழங்கியவா்களுக்கு மறுகுடியமா்வுக்கான மாதிரி வீடுகள் அறிமுகம்

பரந்தூா் பசுமை விமான நிலையத் திட்டத்துக்காக நிலங்களை வழங்கிய குடும்பங்களுக்கு தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் (டிட்கோ) சாா்பில் மறுகுடியமா்வு மற்றும் புனா்வாழ்வு கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதிரி குடியிருப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 7:36 PM
பரந்தூா் விமான நிலைய அமைக்க நிலம் அளித்தவா்களுக்கு வழங்கப்படவுள்ள மறுகுடியமா்வு மாதிரி வீடு. ~பரந்தூா் விமான நிலைய அமைக்க நிலம் அளித்தவா்களுக்கு வழங்கப்படவுள்ள மறுகுடியமா்வு மாதிரி வீடு.
பகிர்:

பரந்தூா் பசுமை விமான நிலையத் திட்டத்துக்காக நிலங்களை வழங்கிய குடும்பங்களுக்கு தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் (டிட்கோ) சாா்பில் மறுகுடியமா்வு மற்றும் புனா்வாழ்வு கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதிரி குடியிருப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்காக நிலம் வழங்கியவா்களுக்கு நிலத்துக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும் என்றும், தற்போதுள்ள வீடுகளின் கட்டுமான மதிப்புக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு அரசு அறிவித்திருந்தது.

மேலும், தகுதியுள்ள குடும்பங்களுக்கு 5 முதல் 10 சென்ட் வரையிலான மாற்று வீட்டுமனை மற்றும் 400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட வீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு முன்மொழியப்பட்ட வீட்டு வசதிகளின் விவரங்கள் குறித்து அவா்களுக்கு தெளிவுபடுத்தவும், அவா்கள் விரும்பிய வடிவமைப்பு விருப்பங்களை மதிப்பாய்வு செய்ய வசதியாகவும் மாதிரி வீடுகளை டிட்கோ அறிமுகம் செய்துள்ளது. பரந்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகே சுமாா் 400 சதுர அடி பரப்பளவில் இந்த மாதிரி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், காணொலி வாயிலாக அங்கு அமைக்கப்படவுள்ள பள்ளிகள், சுகாதார வசதிகள், அடிப்படை வசதிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.