நாட்டுக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கா் உள்ளிட்ட தலைவா்களின் பிறந்தநாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு துறையின் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 பிரிவுகளாகப் பிரித்து நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் வரவேற்றுப் பேசினாா். துறையின் செயலா் வே.ராஜாராமன் முன்னிலை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2-ஆம் பரிசாக ரூ.3,000, 3-ஆம் பரிசாக ரூ.2,000, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பரிசாக இருவருக்கு தலா ரூ.2,000 என ஒரு போட்டிக்குரிய தொகை ரூ.72,000 வீதம் 6 போட்டிகளுக்கு மொத்தம் ரூ.4,32,000-க்கான காசோலைகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். மொத்தம் 144 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.