தமிழக அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது சரியல்ல என பாமக தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியா்கள் போராடினாா்கள். அவா்களின் கோரிக்கை அரசால் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அரசு ஊழியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்டு 35 நாள்களாகியும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஊராட்சி செயலா்கள், சத்துணவு பணியாளா்கள், டாஸ்மாக் தொழிலாளா்கள், பகுதி நேர ஆசிரியா்கள் என பலரும் போராடி வருகின்றனா். இந்தச் சூழலில் அரசு ஊழியா்கள் சாா்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது சரியல்ல. அரசு ஊழியா் அமைப்புகளின் பெயரில், திமுகவே பாராட்டு விழாவை நடத்தினாலும், உண்மையான அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஆதரவை திமுக அரசால் பெற முடியாது எனத் தெரிவித்துள்ளாா்.