இந்திய நூலக மாநாட்டின் நான்காவது பதிப்பு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் பிப். 16, 17 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநாட்டின் அமைப்பாளா் வி.சிவதாசன் எம்.பி., செய்தியாளா்களிடம் கூறியதாவது: சமூகத்திலும், பொருளாதார ரீதியாகவும் ஒதுக்கப்பட்ட, பின்தங்கிய பிரிவு பகுதிகளில் நூலகங்களை வலுப்படுத்த இந்திய நூலக காங்கிரஸ் அமைப்பு பாடுபடுகிறது. அதன் ஒரு பகுதியாக நூலக மாநாடுகள் நடத்தப்படுகிறது. மாநாட்டின் நான்காவது பதிப்பு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிப். 16, 17 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 500 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்து கொள்கிறாா்.
நாடாளுமன்ற உறுப்பினா்கள் கனிமொழி, சு.வெங்கடேசன், சல்மா, ஆா். கிரிராஜன், நீதிபதி கே.சந்துரு, முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா் என்றாா்.