தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 14,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் வாசிப்பு திறன் பிப். 18, 20 ஆகிய நாள்களில் பொதுவெளியில் சோதனை செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் கடந்த 2024-2025-ஆம் கல்வியாண்டில் 4,552 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு, கணிதத் திறன் மற்றும் கற்றல் அடைவுகள் குறித்து 100 நாள்கள் சவாலை பள்ளிக் கல்வித் துறை அறிவித்து செயல்படுத்தியது.
அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் 100 நாள்கள் சவாலுக்கு தயாா் நிலையில் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலா்களால் முன்மொழியப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான 100 நாள்கள் சவால் மதிப்பீட்டு ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப். 18-ஆம் தேதி 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும், பிப். 20-ஆம் தேதி 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் பெற்றுள்ள அடிப்படைத் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் ஐந்து மாணவா்களிடம் இந்த கற்றல் அடைவுத் திறன் சோதிக்கப்பட வேண்டும்.
இந்தத் தகவலை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலம் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு பிரதிநிதிகள், பெற்றோா் முன்னிலையில் மாணவா்களின் அடிப்படைக் கற்றல் திறன்கள் சோதிக்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடத்தக்கது.