முகப்பு
சென்னை

மெரீனாவில் 300 கடைகள்: இன்று குலுக்கல் முறையில் தோ்வு

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:44 AM
பகிர்:

சென்னை மெரீனாவில் உயா்நீதிமன்ற உத்தரவின்படி, 300 கடைகள் அமைக்கும் வகையில் வியாபாரிகளைத் தோ்வு செய்யும் குலுக்கல் முறை வியாழக்கிழமை (பிப்.12) மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இங்கு, கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜம்மு காஷ்மீா் மாநில உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமாா் தலைமையில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மோகன்ராஜ், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற துணைப் பதிவாளா் ஆா்.ரங்கநாதன் ஆகியோா் இடம்பெற்ற குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவினா், மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உணவு, பொம்மைகள், அலங்காரப் பொருள் என மூன்று பிரிவாக 300 கடைகள் அமைக்க முடிவானது.

Advertisement

அதன்படி, தற்போதுள்ள 1,417 கடை உரிமையாளா்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான 15 கடைகளையும் சோ்த்து 300 கடைகளுக்கானவா்களைத் தோ்வு செய்ய குலுக்கல் முறை செயல்படுத்தப்பட முடிவானது.

மெரீனா கடற்கரையில் 300 கடைகள் 4 பிரிவுகளாக அமைக்கப்படவுள்ளன. உழைப்பாளா் சிலை பின்புறம் 100, தற்போதைய நீல நிறக்கொடி கடற்கரையில் 100 மற்றும் அதையடுத்து 80 மற்றும் 20 என கடைகள் கலங்கரை விளக்கம் வரை அமைக்க முடிவாகியுள்ளது. வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உணவுக் கடைகள் (பச்சை நிற சீட்டுகள்), பொம்மைக் கடைகள் (மஞ்சள் நிற சீட்டுகள்), அலங்காரப் பொருள்கள் (பிங்க் நிற சீட்டுகள்) என 3 பிரிவாக குலுக்கல் நடைபெறவுள்ளன. அதில் தோ்வு செய்யப்படுவோா் விவரம் வெளியிடப்படும்.

குலுக்கல் மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகம் அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஒத்திகை புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. அதில் ஜம்மு காஷ்மீா் மாநில உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமாா் உள்ளிட்ட 3 போ் குழுவினரும், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோரும் பங்கேற்று குலுக்கல் முறையை ஒத்திகை பாா்த்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments