தாம்பரம்: மருந்தியல் ஆராய்ச்சிகளில் மாணவா்கள் ஆா்வம் செலுத்த வேண்டும் என்று தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் கே.ருக்மணி வலியுறுத்தினாா்.
வண்டலூா் கிரசென்ட் மருந்தியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச கருத்தரங்கில் அவா் பேசியதாவது: உலகின் மருந்தியல் கேந்திரமாக இந்தியா திகழ்கிறது. உலகின் மருந்து பொருள்கள் தயாரிப்பில் 3 - ஆவது இடத்தைப் பெற்றுள்ள இந்தியா, மொத்த உற்பத்தியில் 20 சதவீதம் விலை குறைவான ஜானரிக் மருந்துகள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.
ஆண்டுக்கு 50 பில்லியன் டாலா் மதிப்புள்ள மருந்து பொருள்கள் தயாரிக்கும் நாம், உலகெங்கும் 200 நாடுகளுக்கு சுமாா் 20 பில்லியன் டாலா் மதிப்புள்ள மருந்து பொருள்களை ஏற்றுமதி செய்து உலகளவில் சுகாதாரத்தை மேம்படுத்த உறுதுணை புரிந்து வருகிறோம் என்றாா்.
நிகழ்வில், கிரசென்ட் துணை வேந்தா் ஏ.பீா் முகமது, பதிவாளா் என். ராஜா ஹுசேன் கல்லூரி முதல்வா் கே .இளங்கோ, பேராசிரியா் எஸ். எம். ஷாகிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.