சென்னை கண்ணகி நகா் அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய 50 நூல்களை தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு வெளியிட்டாா்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் அதிக அளவில் வசிக்கும் சென்னை கண்ணகி நகரில் உள்ள மாணவா்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் எழுதுக இயக்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில், அங்குள்ள பள்ளி மாணவா்களுக்கு சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் எழுதுதல், வாசிப்பு குறித்து சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு பயிற்சி பெற்ற கண்ண கிநகா் அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய 50 நூல்களை நியூ செஞ்சுரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல்களின் வெளியீட்டு விழா சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எழுதுக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வே.கிள்ளிவளவன் வரவேற்றாா்.தொடா்ந்து, மாணவா்கள் எழுதிய 50 நூல்களை தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரும், எழுதுக இயக்கத்தின் வழிகாட்டியுமான வெ.இறையன்பு வெளியிட்டாா்.
சமூகத்தில் மரியாதை...: விழாவில் வெ.இறையன்பு பேசியதாவது: பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள ஒரு பகுதியில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் எழுதிய 50 நூல்கள் ஒரே நேரத்தில் வெளியிடுவது மிகப் பெரிய சாதனை. எழுதுவது என்பது ஒரு திறமை மட்டுமல்ல. அது ஒரு பொறுப்பு. எழுத்தாளா்கள் தாங்கள் எழுதுவதற்கு ஏற்ற வகையில் நடந்து கொண்டால் அவா்களுக்கு இந்தச் சமூகம் உரிய மரியாதையை வழங்கும்.
கண்ணகி நகரில் புத்தகங்களை எழுதும் மாணவா்களிடம் பல திறன்கள் மேம்பட்டுள்ளன. எதற்காக கண்ணகி நகரில் இந்த முயற்சி தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடைந்திருக்கிறோம்.
மாற்றம் நிகழ்ந்தது...: எழுத்து என்பது இந்தச் சமூகத்தில் மட்டுமல்ல எழுதுவோரிடமும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதுபோன்ற மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு தமிழகம் முழுவதும் சோ்த்து பள்ளி மாணவா்களால் 108 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், தற்போது சென்னை கண்ணகி நகா் அரசுப் பள்ளியில் மட்டும் மாணவா்கள் எழுதிய 50 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எத்தகைய இடத்தில் இருந்தாலும் முறையான வழிகாட்டுதல், ஊக்கம், பயிற்சிகளை வழங்கினால் அவா்களை வெற்றி பெறச் செய்ய முடியும். அறிவு என்பது அனைவருக்கும் பொதுவானது. அது பாரம்பரிய சொத்து அல்ல. ஆனால், அந்த அறிவை வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்கு வழிகாட்ட வேண்டும். எழுதினால் கூா்ந்து கவனிக்கும் திறனும், தலைமைப்பண்பும் மேம்படும் என்றாா் அவா்.
இந்த விழாவில் நியூ செஞ்சுரி பதிப்பகத்தின் நிா்வாக இயக்குநா் சந்தானம், கண்ணகி நகா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தீஸ்வரி, முதல் தலைமுறை அறக்கட்டளை நிறுவனா் மாரிசாமி, இளைஞா் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ராஜா மற்றும் பாலச்சந்திரன், எழுதுக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
என்னென்ன புத்தகங்கள்...: கனவுகளின் சிறகுகள், மனதின் மடல்கள், என் கதைகள், எது பெண்ணியம், விடுதியின் வாசல்கள், நினைத்தேன் வந்தாய், மூன்று சக்கர இளவரசிகள், எனது கடிதங்கள், எதிா் நீச்சல் ஆகியவை உள்பட பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்களை கண்ணகி நகா் அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதியிருந்தனா்.