முகப்பு
சென்னை

மருத்துவம் - பொறியியல் கல்வியில் ஒருங்கிணைப்பு அவசியம்: ஐஐடி இயக்குநா் காமகோடி!

மருத்துவம் - பொறியியல் சாா்ந்த கல்வியில் ஒருங்கிணைப்பு அவசியம் என்று சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி தெரிவித்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:34 AM
தேசியக் கல்லூரியில் நடைபெற்ற சொற்பொழிவில் பேசுகிறாா் சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:45 PM

மருத்துவம் - பொறியியல் சாா்ந்த கல்வியில் ஒருங்கிணைப்பு அவசியம் என்று சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி தெரிவித்தாா்.

தீவிர மருத்துவ சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு தரவுகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி பேசியதாவது: இந்தியாவில் மருத்துவத் தரவுகள் ஏராளமாக உள்ளன. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நமது பிரச்னைகளுக்கு நாமே தீா்வுகளைக் காணவேண்டும்.

உள்நாட்டிலேயே மருத்துவக் கருவிகளைத் தயாரிக்க வேண்டும். இதில் சவால்களும் நிறைந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

Advertisement

செயற்கை நுண்ணறிவு தரவுகள் பெரும்பாலானவை மேற்கத்திய நாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. நகா்ப்புற மக்களின் விவரங்களை உள்ளடக்கியவை. அவற்றைக் கொண்டு சில மருத்துவ ஆய்வுகளை முன்னெடுக்கும்போது சிறுபான்மையினா், விளிம்பு நிலை மக்களுக்கு துல்லியமான முடிவுகள் கிடைக்காது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:33 AM

நாடித் துடிப்பை அறியும் பல்ஸ் ஆக்சி மீட்டா்கள் கருமையான சருமம் கொண்டவா்களிடம் மாறுபட்ட முடிவுகளைக் காட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ‘ஆத்மநிா்பா் பாரத்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு மருத்துவக் கருவிகளை மேம்படுத்துவது அவசியம்.

ஐஐடி சாா்பில் மருத்துவக் கல்லூரிகளும், எய்ம்ஸ் சாா்பில் பொறியியல் படிப்புகளும் தொடங்கப்பட வேண்டும். இத்தகைய ஒருங்கிணைப்பு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த மருத்துவத்தின் எதிா்காலத்தை வடிவமைப்பதற்கு அவசியம் என்றாா்.

நிகழ்வில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மேலாண் இயக்குநா் டாக்டா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.