முகப்பு
சென்னை

கடல்சார் துறைகளில் சுயசார்பு அதிகரிக்க சென்னை ஐஐடி உதவி: வி.காமகோடி

கடல் பொறியியல் துறை, கடல்சார் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு சுயசார்பு தளங்களை அதிகரிக்க சென்னை ஐஐடி உதவியாக உள்ளது என அதன் இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார்.

Updated On : 17 மார்ச், 2026 at 9:22 PM
பகிர்:

கடல் பொறியியல் துறை, கடல்சார் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு சுயசார்பு தளங்களை அதிகரிக்க சென்னை ஐஐடி உதவியாக உள்ளது என அதன் இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார்.

சென்னை ஐஐடி-இன் கடல் பொறியியல் துறையின் பொன்விழா கொண்டாட்டங்களின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசியதாவது:

1977-ஆம் ஆண்டு "கடல் பொறியியல் மையம்' ஐஐடியில் தொடங்கப்பட்டு, பின்னர் 1982-ஆம் ஆண்டில் ஒரு முழுமையான துறையாக உருவாக்கப்பட்டது. கடல்சார் பொறியியல், கப்பல் வடிவமைப்பு போன்ற கல்வியோடு, கடலோர தொழில்நுட்பம் ஆராய்ச்சி மேம்பாட்டுடன் இந்தத் துறை வளர்ந்துள்ளது.

நாட்டின் கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முயற்சிகள், துறைமுக மேம்பாட்டு ஆய்வுகள், தூர்வாரும் பணிகள் குறித்த மதிப்பீடுகள், கடல்சார் நீரியக்கவியல் ஆராய்ச்சிகள் உள்ளிட்ட பல தேசிய திட்டங்களுக்கு இந்தத் துறையின் நிபுணத்துவம் பெரிதும் உதவியாக இருந்துள்ளது.

நமது நாட்டின் பல்வேறு நிறுவனங்களுக்கு சுயசார்பு தளங்களை சென்னை ஐஐடி வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் நாடு, "நீலப் பொருளாதாரம்', ஆழ்கடல் ஆய்வுத் திட்டம், கப்பல் கட்டுமானம், பசுமைத் துறைமுக மேம்பாடு, பருவநிலை மாற்றத்துக்கு தகுந்த கடலோரப் பகுதியின் தாங்கும் திறனை மேம்படுத்தல் ஆகியவற்றின் மீது தனது கவனத்தை வலுப்படுத்தி வருகிறது என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில், ஐஐடியின் கடல் பொறியியல் துறைத் தலைவர் அப்துஸ் சமத், பொன்விழா நிகழ்வுகளின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான எஸ்.ஏ.சன்னசிராஜ், சர்வதேச கடல்சார் தொழில்நுட்பச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஆஸ்ட்ராண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த ஓராண்டுக்கான பொன்விழாக் கொண்டாட்டங்கள், கல்வி நிகழ்வுகள், சர்வதேச நிகழ்வுகள், சென்னை ஐஐடி சார்பில் நாட்டில் மேற்கொண்டுவரும் அதிநவீன உள்கட்டமைப்புகள் போன்ற விவரங்களும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →