முகப்பு
தினமணி கதிர்

உற்ற தோழன்!

கடல் மீன் ஒன்றைக் காப்பாற்றி காயமாற உதவி செய்த கடல் ஆய்வாளரை அந்த மீன் மறக்காமல் அடையாளம் கண்டு, சந்தோஷத்துடன் கடலுக்கடியில் நிற்கிறது.

Updated On : 12 ஏப்ரல் 2026, 4:11 am IST
பகிர்:

கடல் மீன் ஒன்றைக் காப்பாற்றி காயமாற உதவி செய்த கடல் ஆய்வாளரை அந்த மீன் மறக்காமல் அடையாளம் கண்டு, சந்தோஷத்துடன் கடலுக்கடியில் நிற்கிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தை மறக்காமல் நினைவில் வைத்து, தனக்கு உதவி செய்தவரை எப்போது அவர் சென்றாலும் அடையாளம் கண்டுகொண்டு, வாஞ்சையுடன் அந்த நபருக்கு அருகில் நிற்கிறது. ஒட்டகம் அல்லது காளையின் திமில்போல் உள்ள இந்த மீனின் நெற்றியில் மேடு அமைந்து தோற்றம் வித்தியாசமாக இருக்கும். நாற்பத்து ஐந்து வயது வரை வாழும் இந்த மீனின் விஞ்ஞானப் பெயர் 'ஆசிய ஷீப்ஹெட் ராஸ்'.

ஜப்பானின் சிபா மாநிலத்தில் டடேயாமா வளைகுடாவில் கடலுக்கடியில் உள்ள ஷின்டோ ஆலயத்தை முப்பது ஆண்டுகளாகப் பராமரித்து வரும் ஹிரோயுகி அரகாவா கூறியது:

Advertisement

Advertisement

'பராமரிப்புப் பணிகளுக்காக நான் அடிக்கடி கடலுக்கு அடியில் சென்று வருவேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காயமடைந்த 'ஆசிய ஷீப்ஹெட் ராஸ்' எனும் அந்த மீன் குணமடைய உதவினேன். புத்துணர்வு அடையும் வரை அதற்கு உணவளித்தேன். இந்தப் பழக்கத்தால், நான் கடலுக்குள் செல்லும்போதெல்லாம், அந்த மீன் என் அருகில் வரும்.

நான் பல நாள்கள் கடலுக்குள் செல்வதில்லை. கடலில் மூழ்கும் இடம் எப்போதும் வேறுபடும். இருந்தபோதிலும், கடலுக்குள் நான் செல்லும்போதெல்லாம் அது வந்துவிடுகிறது. பல சந்திப்புகளுக்குப் பின்னர் அந்த மீனுக்கு 'யோரிகோ' என்று பெயரிட்டேன். சில தருணங்களில் நெருக்கமாக வந்து உரசும். இத்தகைய மீன் இனங்களிடையே இதுபோன்ற நடத்தை அசாதாரணமானது.

அதனுடன் நான் விளையாடி மகிழ்வேன். தலையை வருடி அன்புடன் முத்தமிடுவேன். 'யோரிகோ' போன்ற உற்ற தோழனை மனிதரில் கூட நான் கண்டதில்லை.

யோரிகோவின் நினைவாற்றல் இப்படி அணுகப் பழக்கப்படுத்தப்பட்டது போல தோன்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கின்றனர். இந்த நிகழ்வு, விலங்குகளின் அறிவாற்றல் குறித்த விவாதங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.

மீன் இனங்களின் நுண்ணறிவு நிலைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2016-இன் 'சைன்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' இதழில் மீன்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சில மீன்களால் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் காண முடியும். மனித முகங்களை ஆர்ச்சர் மீன்களால் துல்லியமாக வேறுபடுத்தி அறிய முடியும். பவளப்பாறை மீன்களின் நினைவாற்றல், இடம் சார்ந்த விழிப்புணர்வைக் கொண்டுள்ளன. ராஸ் மீன்கள் அறிவாற்றலில் மிகவும் மேம்பட்ட மீன் இனங்களில் ஒன்றாகும்' என்கிறார் ஹிரோயுகி அரகாவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.