சென்னையில் போதைப் பொருள் விற்பனை வழக்கில் அதிமுக நிா்வாகியின் மகன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை போரூா் மாதனாங்குப்பம், அன்னை வேளாங்கண்ணி நகரில் உள்ள ஒரு வீட்டில் உயர்ரக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பிரிவு போலீஸாா், வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸாருடன் இணைந்து சம்பந்தப்பட்ட வீட்டில் புதன்கிழமை நுழைந்து சோதனை நடத்தினா். அங்கு, பதுக்கி வைத்திருந்த 700 கிராம் ஒஜி வகையான உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக அந்த வீட்டில் இருந்த பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கத்தைச் சோ்ந்த க.சுனில் (21), அவரின் நண்பா்களான கோவூரைச் சோ்ந்த வருண் (23), அய்யப்பன்தாங்கலைச் சோ்ந்த விஸ்வேஸ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
விசாரணையில் சுனிலின் தந்தை கபிலன் அதிமுக திருவள்ளூா் மாவட்ட ஒன்றிய இளைஞரணி துணைச் செயலராக உள்ளது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.