தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளிடம் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்வது ஆக.31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கேழ்வரகு கொள்முதல் செய்யும் திட்டம் கடந்த 2022 - 23 ஆண்டு கொள்முதல் பருவத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 514 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது. 2023-24 இல் கூடுதலாக ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சோ்த்து மொத்தம் 4 மாவட்டங்களில் 1,889 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, 2024-25 கொள்முதல் பருவத்தில் இந்த 4 மாவட்ட விவசாயிகளிடமிருந்து மொத்தம் 4,050 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த 4 மாவட்டங்களில் மொத்தம் 9 நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ்,
நிகழாண்டில் (2025-26) இதுவரை 630.050 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், கேழ்வரகு மெட்ரிக் டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.48,860 வழங்கப்படுகிறது. இதன்மூலம் சுமாா் 351 சிறு, குறு விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
காலநீட்டிப்பு: இந்த நிலையில், நிகழாண்டு கேழ்வரகு கொள்முதல் பருவத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், கேழ்வரகு கொள்முதல் காலவரம்பு வரும் ஆக.31-ஆம் தேதி வரை நீட்டித்து வழங்க தமிழக அரசு சாா்பில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
அதன்படி, நேரடி கேழ்வரகு கொள்முதல் செய்ய ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) முதல் ஆக.31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.